திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Saturday, April 23, 2011

சிஐடியு, ஏஐடியுசி : மேதினச் சூளுரை

-
தமிழ்நாட்டில் மே தினத்தை சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டாட முடிவு செய்துள்ளன. மே தினத்தை சென்னை நகரிலும் மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் ஊர்வலங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் இரண்டு சங்கங்களின் சார்பில் பங்கேற்கும் தலைவர்கள் பட்டியல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.

சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள மேதினச் சூளுரை வருமாறு:

கடுமையான முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியில் உலகம் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் சரியாகிவிடும் என்று சொன்ன ஜோதிடங்கள் எல்லாம் பொய்த்துப் போயின. சரிந்து விழும் நிறுவனங்களை காப்பாற்ற அமெரிக்க அரசும் இதர ஏகாதி பத்திய நாடுகளின் அரசாங்கங்களும் எடுத்த நடவடிக்கைகள் வெற்றிபெற வில்லை.

நெருக்கடி நோயின் மூலகாரணமே முதலாளித்துவ முறைமைதான். அதையே மருந்தாகக் கொடுத்தால், நோய் தீருவது எவ்வாறு சாத்தியம்?

உலகம் முழுவதும் 30 கோடிப்பேர் வேலையிழந்து விட்டனர். பிரிட்டனில் பள்ளிக்கூடத்துக்கு வரும் குழந்தை களில் மூன்றில் ஒருவர் பட்டினியாக வரு வதாகவும், வளர்ச்சிக்கு ஏற்ப காலணி களைப் புதிதாக வாங்க முடியாமல், சிறி தாகிவிட்ட காலணிகளில் கால்களை நுழைப்பதால் புண்ணாகிக் கிடப்பதாக வும், பிரிட்டனின் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

வளர்முக நாடுகளின் மக்களை தள்ளி யது மட்டுமல்ல; வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையும் அவலநிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது.

தென்அமெரிக்க மக்கள் வாக்குச்சீட் டைப் பயன்படுத்தி, அராஜக ஆட்சி களைத் தூக்கி எறிந்ததை முந்தைய ஆண்டுகளில் பார்த்தோம். கடந்த ஆண்டில் அரபு உலகம் தீப்பற்றி எரிந்து கொண்டுள்ளது. அரசாங்கத்தை எதிர்த்து, ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாய்ச்சேர்ந்து நின்று வீதிகளில் இறங்கிப்போராடுகின்றனர். அவிழ்த்து விடப்படும் அனைத்து அடக்குமுறை களையும் எதிர்த்து நிற்கிறார்கள். டுனீ ஷியாவில் முதலில் எடுத்த போராட்டம் அரசுப்பொறுப்பில் இருந்தவர்களை அகற்றியது. பின்னர் எகிப்தில் 30 ஆண்டு களாகக் கொடூர ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி முடித்து வைக்கப் பட்டது. லிபியாவின் சர்வாதிகாரியான கடாபியை எதிர்த்த போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. யேமன், சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுக ளிலும் தெருக்கிளர்ச்சிகள் நடக்கின்றன.

தமது பொம்மைகளாக இருந்த சர் வாதிகாரிகள் மக்களின் சுனாமி எழுச்சி யில் காணாமல் போன நிலையில், புதிய பொம்மைகளை நுழைக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தீவிரமாக முயன்று வரு கிறது. இதற்காக போராடும் மக்களுக்கு ஆதரவு தருவது போல பச்சையாக நடித்து வருகிறது.

அத்தனை அதிகாரங்களையும் தனக் குள்ளேயே முடக்கிவைத்துக்கொள்வதா லும், ஜனநாயக சக்திகளை அடக்கு முறைகளால் ஒடுக்கி வைப்பதாலும், லஞ்ச ஊழல்களால் பெரும் செல்வத் தைக் குவித்து சேமித்து வைத்துக் கொள் வதாலும் ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள யாராலும் முடியாது என இந்தக் கிளர்ச்சிகள் மெய்ப்பித்து விட்டன.

ஒரு மாதத்திற்கு மேலாக பிரான்ஸை நிலைகுலையச்செய்த பிரெஞ்ச் தொழி லாளர் வேலைநிறுத்தம், ஓய்வூதியம் கோரி நடந்தது. ஸ்பெயின், பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா, கிரீஸ், போர்ச் சுக்கல், ஜெர்மனி, தென்கொரியா என அடுக்கடுக்காக வேலையின்மை, சம்ப ளம், வாழ்க்கை மேம்பாடு கோரி தொழி லாளர்கள் போராடினர். உலகத்தொழிற் சங்க சம்மேளனத்தின் 16வது மாநாடு ஏப்ரல் 6 முதல் 10வரை ஏதென்ஸில் நடைபெற்றது. 106நாடுகளிலிருந்து 881 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அளவில் தொழிலாளர் போராட்டமும், தொழிற்சங்க ஒற்றுமையும் அதிகரித்து வருகின்றன.

நம் பாரத தேசத்தில், இந்த ஆண் டுக்கு, ஊழல் ஆண்டு எனப் பெயர் சூட்டி விடலாம் என எண்ணும் வகையில் சிக ரத்தை தொட்ட ஊழல்கள் நடந்துள்ளன.

ஊழல் தடுப்பு ஆணையராக, ஊழல் செய்த பி.ஜே.தாமஸ் என்பவரை அரசு நிய மித்தது. உண்மை வெளிப்பட்டபின்பும், அவர் வெளியேறவில்லை ; கடைசியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுத்தான் அவர் பதவி பறிக்கப்பட்டது. கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பை, அமைச்சர்களும், அதிகாரி களும், ராணுவ உயர் அதிகாரிகளும் சேர்த்து ஆக்கிரமித்துக்கொண்ட கொடு மையும் உச்சநீதிமன்றத் தலையீட்டா லேயே நடவடிக்கைக்கு ஆளானது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற் பனையில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல், அதை மறைக்க அமைச்சர்கள் பேசிய பேச்சுக்கள், அமைச்சர்களை நியமிப்பதில் இடைத்தரகர்களின் ஆதிக் கம் குறித்து வெளியான ஒலிநாடாக்கள், மத்தியஅமைச்சர் ஆ.ராசா வீட்டில் சோத னை, அவரது ராஜினாமா, கைது, சிறை யில் அடைத்தது. தமிழ்நாட்டில் முதல்வர் குடும்பத்தினரே மத்திய புலனாய்வுத் துறையால் விசாரணைக்கு ஆளானது, அவர்களது தொலைக்காட்சி நிறுவனம் சோதனைசெய்யப்பட்டது என பல அத்தி யாயங்கள் கொண்டதாக விரிந்து கொண்டே போகிறது.

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்ப பெற்றபின்பு, தனது ஆட்சியை நிலைக்கச் செய்ய கோடி கோடியாய் காங்கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங் களும் வெளியாகி இருக்கின்றன.

“இந்த நாட்டில் என்னதான் நடந்து கொண்டு இருக்கிறது” என்று உச்சநீதி மன்றமே திகைத்துக்கேட்கும் அளவுக்கு மத்திய ஆட்சியில் உள்ள கூட்டணி அரசும், அதற்குத்தலைமை ஏற்கும் காங் கிரஸ் கட்சியும் நாட்டை தரம் தாழ்த்தி இழுத்துக்கொண்டு சென்றன.

அதேநேரத்தில் மகளிர் 33சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்னமும் நிறைவேற் றப்படவில்லை. உணவுப்பாதுகாப்பு மசோதாவைப் பற்றி ஏராளமாக விவாதித் தும் கூட, இதுவரை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தக்கூட இல்லை.

விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. அடுத்தமாதம் சரியாகிவிடும் என்று அலுக்காமல் பொய் சொல்கிறது அரசாங்கம். பதுக்கல்காரர்களும், கள்ளச் சந்தையினரும் பகிரங்கமாகத் திரிகின்ற னர். வெங்காயவிலை 100 ரூபாயை தாண் டியபோது, ஒரு பதுக்கல்காரனைக்கூட இந்த அரசால் கைதுசெய்ய முடியவில் லை. அவ்வளவு பலவீனமாக இந்திய அரசுஇருக்கிறது.

அதே நேரத்தில் பன்னாட்டு கார்ப் பரேட் நிறுவனங்களுக்கும், உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் எண்ணிலடங் காத சலுகைகளை வாரி வழங்கி வருகி றது. ஆனால் ஏழை மக்களின் அவலங் களை நோக்கிக் கண்ணைத் திருப்ப மறுக்கிறது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோ தக்கொள்கைகளைக் கண்டித்து, ஐஎன் டியுசி உள்ளிட்ட இந்திய தொழிற்சங்கங் கள் இணைந்து போராடி வருகின்றன. இந்தியத் தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கைகளை இந்த ஒற்றுமை தோற்று விக்கிறது. செப்டம்பர் 7ல் நடந்த வேலை நிறுத்தம் இந்தியாவில் மிகப்பெரிய வேலைநிறுத்தமாகும். மார்ச் 5ல் சிறை நிரப்பும் போராட்டத்தில்10லட்சம் தொழி லாளர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதன் முடிவு தெரிய ஒருமாதக்காலம் காத்தி ருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஓர் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை தந்து, எதிர்த்தரப்பினரை ஆள் பலம் கொண்டு அச்சுறுத்தி, அதிகாரி களைத் தனது விருப்பத்திற்கேற்ப வளைத்து கடந்த ஆண்டுகளில் இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றிபெற் றது. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக் கும் இந்த நடைமுறைக்கு திருமங்கலம் பார்முலா என்று ஊடகங்கள் பெயர் வைத்தன. இந்தப் பொதுத்தேர்தலில் ஊழல் நடைமுறைகளை எதிர்த்து மக்கள் அணிதிரண்டுள்ளனர்.

இந்த பொதுத்தேர்தலிலும் அவ்வாறே நடத்த எத்தனித்ததை,தேர்தல் ஆணை யம் எதிர்த்து நின்றது பாராட்டுக்கு உரிய அம்சமாகும். முன்பு போல பணப்பரிவர்த் தனைகளை பகிரங்கமாக நடத்தமுடியா மல் ஆணையம் தடுத்தது. ஆனாலும் ரக சியமாக “ஓட்டுக்கு துட்டு” தரப்பட்டது. பல கோடி ரூபாய்களை ஆணையம் கைப்பற்றியது. அது ஒரு சிறிய பகுதியே. எனினும் “ஆட்சி கையில் இருந்தால் எதையும் செய்யலாம்; அதை தடுத்து நிறுத்துவதற்கு வழியே இல்லை” என்று ஏங்கி கிடந்த மக்களுக்கு, ஆணையத் தின் நடவடிக்கையால், ஜனநாயகத்தின் மீது மீண்டும் ஒரு பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை காணாத அளவுக்குத் திரண்டு வந்து வாக்களித்தது இதனை நிரூபிக் கிறது.

தமிழகத்தில் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குஅதிக சலுகைகள் கொடுத்து கதவை திறந்துவிட்டது மாநில அரசு. அதே நேரத்தில் நடுத்தர, சிறு,குறு தொழில்கள் அழிக்கப்பட்டன. வரலாறு காணாத மின்வெட்டு, தொழில்களை நாசப்படுத்திவிட்டது. பாரம்பரியத் தொழில்களான கைத்தறி, பீடி, கயிறு தயா ரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நலிந்து, அதில் பணிபுரிந்தோர் நடுவீதிக்குத் தள் ளப்பட்டனர். நிரந்தரத்தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, எங்கும், எதிலும், ஒப்பந்தத் தொழிலாளர் முறை கொண்டுவரப்பட்டுவிட்டது.

தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான சட்டம், சுமங்கலித் திட்டம் என்ற நவீன பஞ்சாலைக்கொத்தடிமை முறைக்கு தீர்வு, ஒப்பந்தக்கூலிமுறை ஒழிப்பு, தொழிலாளர் சட்டங்களை அமலாக்கு தல், சமவேலைக்கு சம ஊதியம், குறைந் தபட்ச ஊதியத்தை அதிகரித்து கறாராக அமல் செய்தல், அமைப்புசாரா வாரியங் களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக் குத்தீர்வு, நல உதவிகளை அதிகரித்தல் என தமிழகத்தொழிற்சங்க இயக்கம் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற் றாமலேயே தனது ஆட்சியை முடித்து விட்டது தற்போதைய அரசு. புதிய அரசு இவற்றை நிறைவேற்ற வேண்டும். முடக்கி வைக்கப்பட்டு, செயலிழந்து விட்ட தொழிலாளர் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடின் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் தீவிரப்படும்.

ஐந்து மையமான கோரிக்கைகளை முன்வைத்து ஐஎன்டியுசி உட்பட இந்தி யாவின் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து நடத்தும் இயக்கம் மேலும் வலுப் பெற வேண்டும். இந்த ஒற்றுமையை மேலும் முயன்று கட்ட வேண்டும். தொடர்ந்து வரும் கூட்டு இயக்கங்களை அதிக சக்தியுடன் நடத்தவேண்டும். ஏதுமற்றவர்களாய் இருந்த தொழிலாளி வர்க்கம், போராடிப் போராடித்தான் புதிய உரிமைகளை வென்றெடுத்தது. தொழி லாளி வர்க்கத்திற்கு போராடுவதைத் தவிர உத்தரவாதமான வேறு வழிகள் இல்லை.

இந்த உரிமைப்போரில் உலகம் முழு வதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது உயிரை இழந்துள்ளனர். பல லட்சக் கணக்கானவர்கள் தமது உடமைகளை இழந்தனர். அவர்களின் மாபெரும் தியா கங்களைப் பெருமையோடு நினைவு கூர்ந்து, அந்தப்போராளிகளின் வாரிசுக ளாகப் புதிய போராட்டங்களை முன்னெ டுக்க இந்த மே நன்னானில் உறுதி யேற்போம்.




தீக்கதிர்

Thursday, February 3, 2011

(கோவிந்தசாமி) துரோகசாமி

நீ குடித்து முடித்த
டீ கிளாசை
இரு கையாலும்
ஏந்திக் கொண்ட தோழன்

உன் நாற்காலிக்காக
தன் நரம்புகளை
பின்னக் கொடுத்த தோழன்...

பட்டினி கிடந்தாலும்
உன் பசியாற்றி,
பயணப்படியோடு
வழியனுப்பிய தோழன்

உலகைக் குலுக்கும்
செங்கொடி உயர்த்தி,
உண்டியல் குலுக்கி உனை
வேட்பாளராக்கிய தோழன்....

கோடிகளை சுருட்டும்
கோமான்களை எதிர்க்க
உன்னை கோட்டைக்கு
அனுப்பிய தோழன்

எல்லாம் மறந்த
என் முன்னாள் தோழா!

முதலாளித்துவத்திற்கு
பரிவட்டம் கட்டி
பல்லக்கு தூக்க
முதுகு காட்டிவிட்டாய்!

இட்ட பெயர் உனக்கு
எதுவாகவும் இருக்கலாம்!

தொழிலாள் வர்க்கத்திற்கு
துரோகம் இழைத்த உன்னை
வரலாறு பதிவு செய்யும்
“துரோகசாமி”
என்றே!


-க.பாலபாரதி (நன்றி-தீக்கதிர்)

பார்த்த படங்கள் சில

நவம்பர் மாத இறுதியிலிருந்து டிசம்பர் இறுதி வரை வெளிவந்துள்ள படங்களின் எண்ணிக்கை மலைப்பூட்டுகிறது.நந்தலாலா,மந்திரப்புன்னகை,சிக்கு புக்கு,மகிழ்ச்சி,அரிது அரிது,சித்து +2,அதிசய மணல் மாதா,கோட்டி,நெல்லு,ஈசன்,மன்மதன் அம்பு,தென்மேற்குப் பருவக்காற்று,விருதகிரி, அய்யனார்,நில் கவனி செல்லாதே,ரத்த சரித்திரம்,காந்திபுரம்,ஆட்டநாயகன்,சுட்டி சாத்தான் 3-டி,சிந்தாமணி கொலை வழக்கு என்று பட்டியல் நீளுகிறது.பாபா சாகிப் அம்பேத்கர் தமிழ்ப்பதிப்பும் இம்மாதமே வெளிவந்தது.20க்கு மேற்பட்ட படங்கள் டிசம்பரில் வெளியானதில் படத்தயாரிப்பாளர்களின் அச்சமிகுந்த உளவியல்தான் வெளிப்படுகிறது.தீபாவளிக்கு நாலே படங்கள்தாம் வந்தன.தீபாவளிப்படங்களோடு போட்டி போட முடியுமா என்கிற பயமும் பொங்கல் படங்கள் வந்து சேருவதற்கு முந்தி விடுவோமே என்கிற அவசரமும் சேர்ந்துதான் இந்தக் கொடுமை.ஏகபோகமாகி வரும் தமிழ்த் திரைப்படத்துறை சந்திக்கும் நெருக்கடிகளில் இதுவும் ஒன்று.

மாதம் 25 படம் வெளியானால் தமிழ் ரசிகன் என்ன ஆவான்? பத்திரிகைகளில் சினிமா விமர்சனம் எழுதுகிறவர்களும் எல்லாப்படங்களையும் பார்த்து ஒரு கணிப்புக்கு வருவதும் மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதாகும்.எழுதும் தகுதியும் இந்த எல்லாப்படங்களுக்கும் இருப்பதுமில்லை.இந்த நீண்ட பட்டியலில் குறிப்பிட்டுப் பேசத்தக்க படமாக நந்தலாலா மட்டுமே நிற்கிறது.வேறு சில காரணங்களுக்காக சில படங்கள் பற்றி மட்டும் இங்கே பேசலாம்.

மன்மதன் அம்பு


உலகநாயகன் என்று போற்றப்படும் கமலஹாசன் கதை,திரைக்கதை வசனம் எழுதிக் கதாநாயகனாக நடித்துள்ள படம் மன்மதன் அம்பு.உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு.ஆகவே கலைஞர் டிவி ஆதரவுள்ள படம். 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட (ஸ்மால் பட்ஜெட் !) படம்தான்.கமல் எப்போதும் ஒரு சீரியஸ் படம் கொடுத்தால் அடுத்து ஒரு காமெடி படம் கொடுப்பார்.அந்த விதி பிசகாமல் உன்னைப்போல் ஒருவனுக்குப் பிறகு வந்துள்ள படம் இது.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம் என்பதால் கமலும் அவரும் இணைந்து கொடுத்த அவ்வை சண்முகி,பம்மல் கே.சம்பந்தம்,பஞ்ச தந்திரம் ,தெனாலி போல வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு படத்தை எதிர்பார்த்து (நல்லா சிரிச்சு ரொம்ப நாளாச்சய்யா) கமல் ரசிகர்கள் காத்திருக்க,மன்மதன் அம்பு அதை நோக்கிப் பாயவில்லை. ஏமாற்றம்தான்.

மன்மதனின் அம்பு முதலில் தப்பிப் பாய்ந்து விடுகிறது.கடைசியில் சரியாகக் கதாநாயகனின் மீதே பாய்ந்து படம் முடிகிறது.கதை அவ்வளவுதான்.த்ரிஷா நடிகையாக நடித்துள்ளார்.அவரை வெறிகொண்டு காதலிக்கும் தொழிலதிபராக மாதவன்.சந்தேகப்பிராணியான அவரிடம் சண்டை போட்டு மனநிம்மதி தேடி ஐரோப்பியச் சுற்றுப்பயணம் செல்லும் த்ரிஷாவைப் பின் தொடர்ந்து அவர் வேறு ஆண்களோடு பழகுகிறாரா என்பதைக் கண்காணித்து உடனுக்குடன் தகவல் அனுப்ப மாதவன் அனுப்பிய டிடெக்டிவ் (துப்பறிபவர்) ஆக மேஜர் மன்னார் வேடத்தில் கமல்.கடைசியில் த்ரிஷா மாதவனைக் கைகழுவி விட்டு கமலைக் கைப்பிடிக்கிறார்.இந்தக்கதைக்காக கேமராவைத்தூக்கிக்கொண்டு ஐரோப்பா பூராவும் சுத்திச் சுத்திப் படம் எடுத்திருக்கிறார்கள்.2 கோடி ரூபாயில் மைனா,களவாணி மாதிரி படங்கள் வந்து தமிழ் நாட்டைக் கலக்கிக்கொண்டிருக்கும் உண்மையை இவர்கள் எப்போதும் கவனிப்பதே இல்லை.

படத்தில் கமல் ரொம்ப வயசாகி அலுத்துப்போனவர் மாதிரி வருகிறார்.ரிடையர்டு மேஜர் என்றால் அப்படி இருப்பது சரிதான்.ஆனால் த்ரிஷா மாதிரி சின்னப்பிள்ளைக்கு ஜோடி என்னும் போது பொருந்தவில்லை.நல்ல வேளையாக படத்தில் டூயட் பாட்டெல்லாம் போட்டு நம்மைக் கொல்லவில்லை.குத்துப்பாட்டு ,சண்டை போன்ற கூத்துகளும் இல்லை.திரைக்கதை இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் வழக்கமாக கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் காணப்படும் வர்த்தக வேகம் இப்படத்தில் இல்லாமல் இழுவையாகப் போய்க்கொண்டே இருக்கிறது.இறுதிக்காட்சி சுத்த சொதப்பல்.உலகநாயகன் படம் என்பதால் அவரே படம் முழுக்க தலையைக் காட்டிக்கொண்டிராமல் மாதவன் த்ரிஷாவுக்கு முக்கிய இடம் கொடுத்திருப்பதைப் பாராட்டலாம்தான்.ஆனால் படம் இதோ வேகமெடுக்கப் போகிறது வேகமெடுக்கப்போகிறது என்று 152 நிமிடமும் ஆவலோடு காத்திருந்து அலுப்போடு எழுந்து வரவேண்டியதாயிற்று.

இப்படத்தில் அறிமுகமாகியுள்ள இரண்டு இளைஞர்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும். ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியுள்ள மனுஷ் நந்தன் (ஞாநி-பத்மா இவர்களின் புதல்வர் இவர் என்பது ஒரு தகவல்) சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். படத்தொகுப்புச் செய்துள்ள ஷான் முகம்மது வரவேற்கப்படவேண்டிய இளைஞர்.கப்பல் காட்சிகளில் மனுஷ் நந்தனின் கேமரா நம்மை அங்கேயே கொண்டு நிறுத்துகிறது.நீல வானம் பாடல் காட்சி படமக்கப்பட்டுள்ள விதம் தமிழ் சினிமாவுக்குப் புதிது.கே.எஸ்.ரவிக்குமார் தன் வழக்கமான பாதையிலிருந்து விலகியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனாலும் இந்தக்கதைக்காக 50 கோடி செலவழிப்பது என்ன நியாயம் என்று நமக்குப் புரியவில்லை. ரொம்ப சுமாரான படம்.

விருதகிரி

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் புரட்சிக்கலைஞர் விஜய்காந்த் இயக்கியுள்ள முதல் படம்.அவர் நடித்து வெளிவரும் 153ஆவது படம்.2011 சட்டமன்றத்தேர்தலை மனதிற்கொண்டு தன்னுடைய விருத்தாச்சலம் தொகுதியில் புகழ்பெற்ற சாமி பெயரான விருதகிரீஷ்வரர் பெயரைச் சுருக்கிப் படத்துக்கு விருதகிரி என்று பெயர் வைத்துள்ளார்.விஜய்காந்த் என்றாலே திறமை மிக்க பொறுப்புள்ள ஒரு போலீஸ் அதிகாரி என்பது தமிழ்நாட்டில் பேசத்தெரியாத பச்சைப்பிள்ளைக்குக் கூடத் தெரியும்.ஆனால் போலீசிலேயே உயர்ந்த போலீஸ்கள் வாழும் ஸ்காட்லாண்ட் யார்டுக்குத் தெரியுமா?அங்கே பயிற்சிக்குப் போன இடத்தில் ஸ்காட்லாண்ட் நகரில் ஊடுறுவும் தீவிரவாதிகளைப் பிடிக்க முடியாமல் ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் திணறிக்கொண்டிருக்க நம்ம பொறுப்புள்ள போலீஸ் அதிகாரி விஜய்காந்த் நுழைந்து தீவிரவாதிகளை துவம்சம் செய்து பிடித்துக் கொடுக்கிறார்.ஸ்காட்லாண்ட் யார்டே வியந்து தன்னை மறந்து மெய்சிலிர்த்து நிற்கிறது.இப்படி ஒரு போலீஸ் அதிகாரியா? ( எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிச்சுக் கதை எழுதியிருக்காங்க என்று நமக்குப் புல்லரிக்கிறது)கட். அடுத்த காட்சி இந்தியா.பத்திரிகையாளர்கள் அவரை மொய்த்து விடுகிறார்கள்.25 மைக்குகளுக்கு முன்னால் கையைக் கையை ஆட்டி விஜய்காந்த் பேசும் அதே அரசியல் மேடை பாணியில் பிரஸ்மீட்டிலும் முழங்குகிறார்.படம் முழுக்கவே இதே கையை ஆட்டிப் பேசும் வசனம் மட்டும்தான் அவருக்கு-அரசியல் படமாச்சே.ஒரு அரசாங்க அதிகாரியாக இருக்கும்போதே இவ்வளவு நல்லது செய்றீங்களே இந்த அரசாங்கமே உங்க கட்டுப்பாட்டுக்குள்ளே வந்துட்டா எப்படி இருக்கும் என்று திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப யாராவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.யாரும் சொல்லவில்லையென்றால் விஜய்காந்த்தே இந்த வசனத்தைச் சொல்லி விடுகிறார்.படத்தின் ஒரே செய்தியும் அதுதான்.படத்தில் கதை என்றும் ஒன்று சொல்கிறார்கள்.தேசிய திராவிடக்கட்சி என்பதால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி விஜய்காந்த் மிகவும் கவலைப்பட்டுள்ளார்.அது ஒரு தேசியப் பிரச்னை அல்லவா? அடுத்த விமானத்தில் ஏறி விஜய்காந்த் ஆஸ்திரேலியா செல்கிறார்.அப்புறமென்ன? அங்குள்ள இந்திய எதிரிகளைத் துவம்சம் செய்து மாணவிகளைக் காப்பாற்றி நாடு திரும்புகிறார்.

நமக்கு வடிவேலு காமெடிக்காட்சி ஒன்றில் வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. “இன்னுமாடா நம்ம சனங்க நாம சொல்றதையெல்லாம் நம்புறாங்க..?..” ஆனால் தேமுதிக கட்சியின் அரசியல் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அதே ’தெளிவு’ இப்படத்திலும் இருக்கிறது.கலைஞர் குடும்ப அரசியல் மற்றும் திமுக ஆட்சி மீதான சில்லறை விமர்சனங்களை பன்ச் டயலாக்காகப் பேசுவதே அரசியல் என்று நம்பிப் படத்தை எடுத்திருக்கிறார் விஜய்காந்த்.முந்தைய படங்களைவிட இதில் பெருத்த உடலுடன் வசனம் பேசினால் மூச்சிறைக்கும் உடல் மொழியுடன் சிரமப்பட்டுச் சிரமப்படுத்தியிருக்கிறார் விஜய்காந்த். பல பத்திரிகைகளில் விஜய்காந்த் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் படம் இது என்று எழுதியிருந்தார்கள்.ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் விஜய்காந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களைத் தவிர வேற மனுச மக்க யாரும் உட்கார்ந்து பார்க்க முடியாத படம் இது.இதை வச்சிக்கிட்டு 2011 இல் ஆட்சியைப்பிடித்து விடலாம் என்று சீரியஸ்ஸாக நம்புகிறார்கள் என்பதுதான் படத்தைவிடப் பெரிய நகைச்சுவை.படத்தின் ஒரே ஆறுதல் வழக்கம்போல் தனக்கு ஒரு ஜோடியைப்போட்டு மழையில் நனைய நனைய ஒரு டூயட் பாடலை சேர்க்காமல் விட்ட பெருந்தன்மைதான்.

ஈசன்

சுப்பிரமணியபுரம்,நாடோடிகள் போன்ற வெற்றிப்படங்களைத் தந்த எம்.சசிகுமார்,சமுத்திரக்கனி கூட்டணியில் வந்துள்ள ஈசன் முந்தைய படங்களைப்போல நம்மைக் கட்டிப்போட்டு வைக்க முடியாமல் தொய்ந்து தொங்குகிறது.வழக்கமான பழிவாங்கும் கதைதான்.மாறுதலாக கொலையாளி ஒரு ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவன் என்று சொல்லியிருக்கிறார்கள்.இதெல்லாம் படிக்கிற மாணவ மனங்களில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்கிற அச்சம் நமக்கு வருகிறது.மீண்டும் மீண்டும் சலிப்பூட்டும் அளவுக்குக் காட்டப்படும் பப் மற்றும் டிஸ்கொதே கிளப் ஆட்டங்களும் ஒளிக்கற்றைகளும்(கண்ணு வலிக்கு சாமிகளா) சென்னை நகரின் இரவு வாழ்க்கையைச் சொல்கிறார்கள் என்று புரிய வைக்கின்றன.ஆனாலும் வீடற்ற பிளாட்பார வாசிகளான மக்களின் இரவுகள்தான் உண்மையான சென்னை இரவு வாழ்க்கை என்பதை யாராவது எப்போதாவது சொல்வார்களா என்கிற ஏக்கம் மீண்டும் நமக்கு வருகிறது.அங்காடித்தெருவில் சில காட்சிகள் வந்தது நினைவுக்கு வருகிறது.

ஒருவித சஸ்பென்ஸ் படம் முழுக்க நிரவியிருப்பது பாராட்டத்தக்கது என்றாலும் நீளமான ப்ளாஷ்பேக் வந்து படத்தை பெரும் இழுவையாக மாற்றியிருகிறது.முற்பகுதியில் ஈவ் டீசிங்கில் பலியாகும் மாணவியைக் காட்டி வித்தியாசமாக ஏதோ சொல்லப்போகிறார் சசிகுமார் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உடனே ஏமாற்றி விடுகிறார்.

எம்.சசிகுமார் என்றாலே த்ரில்-வெட்டு,குத்து,தூக்கிருவம்டா என்று அடையாளப்படும் அளவுக்கு கொலைகாரப்படமாகவே தந்துகொண்டிருக்கிறார். பொதுவாக கிராம வாழ்க்கையை முன்வைத்து வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்கள் அப்படியே சினிமாத்துறை தனக்குப் பட்டிக்காட்டு முத்திரை குத்திவிடக்கூடாதே என்கிற பதட்டத்தில் அடுத்த படத்தில் பயங்கர மாநகர வாழ்க்கையை முன்வைத்துப் படம் பண்ணிவிடுவது தமிழ்ச்சினிமா உலகில் பாரதிராஜா காலம் தொட்டு நான் மகான் அல்ல சுசீந்திரன் வரை நடந்து வருகிற ஒன்றுதான்.அதே பாட்டையில் எம்.சசிகுமாரும் ஒரு படம் பண்ணி விட்டார் அவ்வளவுதான்.வாழ்க்கையின் மீது ஒரு பயமும் அவநம்பிக்கையும் உண்டாக்கும் படம் ஈசன்.

நந்தலாலா


ஆழமான வாழ்வனுபவத்தைத் திரையில் கொண்டுவந்து நம்மைத் திக்குமுக்காடச்செய்திருக்கும் படம் நந்தலாலா.ஜப்பானியப்படமான கிக்குஜிரோவிலிருந்து உந்துதல் பெற்று (சில காட்சிகள் கூட அதே பணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது) எடுக்கப்பட்ட படம் என்கிற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும் அதெல்லாம் இந்தப்படம் கொடுக்கும் அனுபவத்தின் முன்னால் கால்தூசு பெறாத விமர்சனமாகிப் போகிறது.மிஷ்கின், அஷ்வத்ராம் , இளையராஜாவின் இசை ஆகிய மூவர் கூட்டணியில் மகேஷ் முத்துச்சாமியின் கேமிராவின் உதவியோடு இப்படம் நம்மை ஏதேதோ உயரங்களுக்கு அழைத்துச்செல்கிறது.மனநிலைப் பிறழ்வுக்காளாகி மனநலச் சிறைக்கூடத்திலிருந்து தப்பிய ஒருவரும் எட்டு வயதுப் பள்ளி மாணவன் ஒருவனும் தத்தமது தாயைத் தேடிச் செல்வதுதான் கதை.தாயைத்தேடிய பயணம் என்கிற தத்துவவிசாரம் அழகான காட்சிகளோடு நம் கண்முன்னே விரிகிறது.இது யதார்த்த சினிமாவா வர்த்தக சினிமாவா என்கிற கேள்விகளெல்லாம் தவிடுபொடியாகிட இது உலக சினிமாவாக உயர்ந்து நிற்கிறது.

அன்பும் கருணையும் வாஞ்சையும் சக மனிதர்கள்பால் அக்கறையும் அற்றுப்போன ஒரு உலகத்தில் பொய்யும் புனைசுருட்டும் துரோகமும் கழுத்தறுப்பும் லஞ்சமும் ஊழமும் பிராடு பித்தலாட்டமும் அன்றாடமாகிப்போன ஒரு உலகத்தில் வாழும் நாம் திரையரங்கில் பார்வையாளர்களாக உட்கார்ந்திருக்க இது பற்றியெல்லாம் ஏதுமறியாத கள்ளம் கபடில்லாத இரண்டு பச்சை உள்ளங்கள் காட்சிரூபமாக நம் முன்னே திரையில் நடந்துகொண்டே இருக்கிறார்கள் .பரந்து விரிந்த இயற்கையின் ஊடே ஆளரவம் அதிகமில்லாத நெடுஞ்சாலையில் அவர்கள் நடந்துகொண்டே இருக்க நாம் நமக்குள்ளே ஒரு பயணத்தைத் துவங்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.ஒரு கலைப்படைப்பு இதைத்தானே செய்ய வேண்டும்.

நிறுவனமாகிவிட்ட குடும்ப மற்று சமூக அமைப்புசார் மனிதர்களெல்லாம் இப்படத்தில் மோசமானவர்களாகவும் விளிம்புநிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள்,பாலியல் தொழிலாளி, குறவரின மக்கள் என நம் சமூகம் கீழ்நிலையில் வைத்திருக்கும் மனிதர்கள் எல்லாம் உன்னதமானவர்களாவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.இப்படம் முன்வைக்கும் முக்கியமான அரசியல் இது.மைனா படத்திலும் இதை நாம் பார்த்தோம்.இத்தகைய முன்வைப்புகள் தமிழ் சினிமாவில் எப்போதேனும் நிகழும் அபூர்வமான ஒன்றாகும்.

மனப்பிறழ்வுக்காளான ஒருவரை தமிழ் சினிமா இத்தனை அற்புதமாக இதற்குமுன் காட்டியதில்லை.மிஷ்கின் நம் மனங்களை அலைக்கழித்துவிட்டார். இக்கதாபாத்திரத்தில் நடித்தால் இமேஜ் போய்விடும் என்றஞ்சி கேட்ட நடிகர்களெல்லாம் நடிக்க மறுத்துவிட்டதால் மிஷ்கின் தானே நடிக்க நேர்ந்ததாகக் கூறுகிறார்.தமிழ் சினிமா நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த உருப்படியான காரியம் இப்படத்தில் நடிக்க மறுத்ததுதான்.

அம்மாவைச் சந்திக்கும் கடைசிக்காட்சி எல்லாவிதத்திலும் உச்சம்.இளையராஜாவின் பாடல்தான் அந்த இடத்தில் சற்றுத் தொந்தரவாக அமைகிறது.ரெண்டு வரி மட்டும் பாடி முடித்திருந்தால் இன்னும் கனமாக இருந்திருக்கும்.கடைசி முடிப்பின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

காட்சிகளின் மூலம் பல கேள்விகளை எழுப்பி ஒரு தத்துவ தளத்தில் நுட்பமாக இயங்கியிருக்கும் நந்தலாலா மீண்டும் மீண்டும் பார்த்து(ஒரு புத்தக வாசிப்பைப்போல) கூடி விவாதிக்கத்தக்க அபூர்வமான படம்.பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்.

இப்படம் எடுக்கத் தயாரிப்பாளர் கிடைக்காது பட்ட மிஷ்கின் பட்ட கஷ்டங்களும் எடுத்து முடித்து இரண்டாண்டுகளாக விநியோகஸ்தர் கிடைக்காமல் படம் முடங்கிக் கிடந்ததும் நடிக்க ஆள் கிடைக்காததும் போன்ற உண்மைகளை தமிழ்ச் சினிமா உலகின் அழுகிய வியாதியின் கூறுகளாக நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.ஆகவே தயாரிப்பாளர் ஐங்கரன் இண்டர்நேஷனல் அருண்பாண்டியனுக்கு சிறப்பான பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

(செம்மலருக்காக எழுதியது ச.தமிழ்ச்செல்வன் )

Sunday, November 28, 2010

சமுதாய லட்சியத்தோடு படைத்திட எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்

சமுதாய ஏற்றத்தாழ்வு களுக்கு முடிவு கட்டும் லட்சி யத்தோடு எழுத்தாளர்கள் தொடர்ந்து படைப்புகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில இலக்கியப் பரிசுகள் (2009) வழங்கும் விழா சனிக்கிழமை அன்று (நவ. 27) சென்னையில் நடை பெற்றது. சங்கத்தின் தென் சென்னை மாவட்டக்குழு ஏற் பாடு செய்திருந்த இந்த விழா வில் உரையாற்றிய மாநிலப் பொதுச் செயலாளர் ச. தமிழ்ச் செல்வன் படைப்பாளிகளின் சமுதாய நோக்கம் என்றென் றும் தொடர வேண்டும் என்றார்.

“ஒவ்வொருவருக்கும் எழுத் தாற்றல் இருக்கிறது. கிராமங் களில் சாமி ஆடுவார்கள். சாதா ரணமாக சாமி வந்துவிடாது. அருகிலிருந்து மேளக்காரர் கள் கொட்டடிப்பார்கள். அப் போது தானாக ஆட்டம் வரும். அவ்வாறு ஒவ்வொருக்கும் இருக்கிற படைப்பாற்றல் என்ற சாமியை வெளியே கொண்டு வர கொட்டடிக்கும் பணியைத் தான் தமுஎகச செய்து வரு கிறது,” என்றார் அவர்.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ. பெருமாள் பேசுகையில், உயர்ந்த அதிகாரியாக இருந்த போதிலும் மறைந்த எழுத்தா ளர் சு. சமுத்திரம் எளிய மக்க ளோடு கலந்து நின்றதை நினைவு கூர்ந்தார். மாநிலப் பொருளாளர் இரா.தெ. முத்து, வடசென்னை மாவட்டச் செய லாளர் நா.வே. அருள் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.

எழுத்தாளர் சு. சமுத்திரம் நினைவு விளிம்புநிலை மக் கள் - இலக்கியப் பரிசு ‘யார் அந்த பஞ்சமர்? ஒரு தொலைந்த உலகு’ நூலை எழுதிய கே. கங்காதரனுக்கு வழங்கப்பட் டது. பெருமாயி குப்பண்ணன் நினைவு நாவல் - இலக்கியப் பரிசு ‘அறுபடும் விலங்கு’ எழு திய கரன்கார்க்கி, தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூல் - இலக்கியப் பரிசு ‘தமிழி சையும் இசைத்தமிழும்’ எழு திய முனைவர் அரிமளம் சு. பத்ம நாபன், எழுத்தாளர் புதுமைப் பித்தன் நினைவு சிறுகதை இலக்கியப் பரிசு ‘பிறிதொரு மரணம்’ புத்தகத்தை எழுதிய உதய சங்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

அகிலா - சேதுராமன் நினைவு குழந்தை - இலக்கியப் பரிசு, செல்வன் கார்க்கி நினைவு கவிதை - இலக்கியப் பரிசு ஆகிய இரண்டும் ‘அமே சான் காடுகளும் சகாரா பாலை வனமும் எப்படித் தோன்றின’, ‘குளம்பொலி ஞானங்கள்’ ஆகிய இரு புத்தகங்களையும் எழுதிய பெ. கருணாகரன், தமி ழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவு மொழிபெயர்ப்பு - இலக்கியப் பரிசு ‘அமினா’ என்ற நைஜீரியாவைச் சேர்ந்த முக மது உமர் எழுதிய நூலை மொழி பெயர்த்த பேராசிரியர் தருமி ஆகியோருக்கு வழங்கப்பட் டன.

பரிசுக்குரிய நூல்கள் குறித்து தேர்வுக் குழுக்களின் தலைவர்களாகச் செயல்பட்ட எஸ்.ஏ. பெருமாள், சோலை சுந் தர பெருமாள், திருப்பூர் ஈஸ் வரன், அ. குமரேசன், மயிலை பாலு, நாகை காவியன் ஆகி யோர் உரையாற்றினர்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் சைதை ஜெ. தலை மையில் நடந்த இந்த விழா வில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் கி. அன்பரசன் வர வேற்றார். சிவசெந்தில் நன்றி கூறினார். சு. சமுத்திரத்தின் புதல்வி அமுதா ரமேஷ் உள் ளிட்டோர் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டனர். முன்னதாக இப்புத்தகங் களைக் குறித்து அறிமுகப் படுத்தும் குறும்படம் திரை யிடப்பட்டது . இதனை தயா ரித்த ரகுநாத், விஜயன், குரல் வழங்கிய சிறுமி சிநேகா ஆகி யோர் கவுரவிக்கப்பட்டனர்.

செய்தி தீக்கதிர்
29/11/2010

Tuesday, October 5, 2010

விளையாட்டென்பது சும்மா விளையாட்டல்ல….

எழுதியது ச.தமிழ்ச்செல்வன்
--------------------------


டெல்லியில் நடைபெற உள்ள 19-ஆவது காமன்வெல்த் விளையாட்டிலும் கைவைத்து ’விளையாடிவிட்ட’ இந்திய அதிகாரிகள்,துணைபோகும் அமைச்சர்கள் பற்றி நாள்தோறும் ஒரு செய்தியை நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம்.போபர்ஸ் பீரங்கியிலிருந்து ,மாட்டுத்தீவனம், சுடுகாட்டுக்கொட்டகை என எல்லாவற்றிலும் விளையாடிய நம் மகானுபாவர்கள் விளையாட்டில் மட்டும் எப்படி விளையாடாமல் இருப்பார்கள்.நக்குற நாயிக்கு செக்குன்னு தெரியுமா செவலிங்கம்னு தெரியுமா? அது பற்றி ஏராளமான கட்டுரைகள் தினசரி பத்திரிகைகளில் வந்து கொண்டே இருக்கின்றன.ஆகவே இக்கட்டுரை அதுபற்றிப் பேசாமல் இன்னும் அதிகம் பேசப்படாத விளையாட்டைப்பற்றிய சில விடயங்களைப் பற்றிப் பேசவிருக்கிறது.

* * *

வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச் சுட்ட 1911 ஆம் ஆண்டுதான் காமன்வெல்த் விளையாட்டுக்களுக்கான மூல விதை நடப்பட்டது.அந்த ஆண்டில் இங்கிலாந்தின் மன்னனாக ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டிக் கொண்டதை ஒட்டி அவன் இந்தியாவுக்கு வருவதை எதிர்த்தே- அந்த எதிர்ப்பை உலகுக்காட்டவே -வாஞ்சி ஆஷைச் சுட்டுக்கொன்றார்.(வாஞ்சியைப் பற்றிய கணிப்புகள் இன்று மாறி வந்தாலும் அவர் சுட்டது ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் வருகையை ஒட்டியே என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை). நேர்மாறாக அதே ஐந்தாம் ஜார்ஜ் பதவியேற்றதைக் கோலாகலமாகக் கொண்டாடுவதற்காக அதே 1911இல் இங்கிலாந்தில் ஒரு விளையாட்டுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.ஆஸ்திரேலியா,கனடா,தென் ஆப்பிரிக்கா,இன்கிலாந்து போன்ற நாடுகள் அப்போட்டியில் பங்கேற்று மன்னர் முடிசூட்டிக்கொண்டதை விளையாடிக் களித்தன.அதற்கு சாம்ராஜ்ஜிய விளையாட்டு விழா என்று பேர் வைத்தார்கள்.1930இல் அவ்விளையாட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய விளையாட்டு எனப்பேர் பெற்று 1954இல் அது கனடா நாட்டில் விளையாடப்பட்டபோது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்று பேர் பெற்று 1970 இங்கிலாந்தில் விளையாடப்பட்டபோது பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்றாகி மீண்டும் 1978இல் கனடாவில் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்கிற இன்றைய நாமத்தைப் பெற்றது.

காமன்வெல்த் என்பது 54 நாட்டு அரசுகளின் ஒரு கூட்டமைப்பு.அந்த 54இல் 52 நாடுகள் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரிட்டனுக்கு அடிமைப்பட்டிருந்த முன்னாள் காலனி நாடுகள்.ஆகவே காமன்வெல்த் என்பது பழைய ராஜவிசுவாசிகளின் சங்கம் என்பதாக ஆரம்பத்தில் தோற்றம் கொண்டிருந்தது.இந்நாடுகளின் மீது அரசியல்,பொருளாதார நிர்ப்பந்தம் செலுத்த இவ்வமைப்பை இங்கிலாந்து பயன்படுத்தும் சாத்தியமும் அப்போது இருந்தது.ஆகவே காமன்வெல்த்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது (தற்காலப்படுத்தப்படுவதற்கு முந்திய )கட்சித்திட்டத்திலேயே குறிப்பிட்டது.

1971 சிங்கப்பூர் பிரகடனம் காமன்வெல்த்தில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் சுயாதிபத்திய உரிமை பெற்ற சமமான மதிப்புள்ள உறுப்பினர்கள் என்றும் இவ்வமைப்பின் லட்சியம் ஜனநாயகம்,மனித உரிமைகள்,நல்லாட்சி,சட்டத்தின் ஆட்சி,உலகசமாதானம் போன்றவைதான் என அறிவித்தது.இந்த காமன்வெல்த் விளயாட்டுகள் ஒன்றுதான் அப்படி ஒரு அமைப்பு இருப்பதை ஞாபகப்படுத்தும் நிகழ்வாக இருக்கிறது.இது தவிர வேறுசில அமைப்புகளும் காமன்வெல்த்தில் இருக்கின்றன.காமன்வெல்த் இடுகாட்டுக் கமிசன் என்பது உலகெங்கும் பரவிக்கிடக்கும் 2500 போர்வீரர் கல்லறைத்தொகுதிகளைப் பராமரிக்கிறது.உலகப்போர்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்காகப் போரிட்டு மடிந்த போர்வீரர்களின் கல்லறைகளாகும்.இதுபோல பண்பாடு,கலை இலக்கியம் போன்றவற்றுக்கான சில அமைப்புகளும் இயங்குகின்றன.ஆகவே 1950களில் இருந்த காமன்வெல்த் பற்றிய கணிப்புகள் இன்று மாறியுள்ளன.

எனினும் அதன் தலைவராக இப்போதும் எலிசபெத் ராணியே இருக்கிறார்: தலைமையகம் நிரந்தரமாக லண்டனின் மல்பரோ மாளிகையிலேயே இருக்கிறது:என்பது போன்ற உண்மைகளால்

ராஜவிசுவாச சங்கம் என்கிற அதன் தோற்றம் முற்றிலும் மறையாமல் தொடரத்தான் செய்கிறது-அதன் செயலாளர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறார் –அவர் ஐ.நா.பொதுக்குழுவில் ஒரு பார்வையாளராக அனுமதிக்கப்படுகிறார் என்றாலும் கூட.

இப்படியான ஒரு அமைப்பின் ஒரு பகுதியான விளையாட்டுத்தான் காமன்வெல்த் விளையாட்டு 2010 ம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாட்டின் முக்கிய நகரம் ஒன்றில் நடத்தப்படுகிறது.சென்ற காமன்வெல்த் போட்டிகள் 2006இல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.2014 இல் ஸ்காட்லாண்டிலும் 2018இல் இலங்கை அல்லது ஆஸ்திரேலியாவிலும் நடைபெற இருக்கிறது.

இந்த விளையாட்டுக்களை பல உறுப்பு நாடுகள் புறக்கணித்த வரலாறும் உண்டு.பெரும்பாலும் தெனாப்பிரிக்காவில் பன்னெடுங்காலமாக அமலில் இருந்த (இன்றும் தொடரும்) நிறவெறிக்கொள்கைக்கு எதிரான உணர்வுடன் 1978இல் நைஜீரியா புறக்கணித்தது.1986இல் தாட்சரின் தெனாப்பிரிக்காவுக்கு ஆதரவான விளையாட்டுக் கொள்கை காரணமாக 32 நாடுகள் காமன்வெல்த் விளையாட்டைப் புறக்கணித்தன.

* * *

இவ்விதம் விளையாட்டில் அரசியல் ஊடாடுவது என்பதைத் துவக்கி வைத்தவன் ஜெர்மானிய பாசிஸ்ட் ஹிட்லர்தான்.1931இல் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடத்த ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்தது.முதல் உலகப்போருக்குப் பின் சர்வதேச சமூகத்தால் ஒதுக்கப்பட்டிருந்த ஜெர்மனி(ஒவ்வொரு உலகப்போருக்குப் பின்னும் தோற்ற நாடுகள் ஒலிம்பிக்கிற்கு அழைக்கப்படவில்லை) மீண்டும் உலக நிகழ்வு ஒன்றை நடத்தும் வாய்ப்பைப்பெற்றது.ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனியில் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்புகள் ஹிட்லரை 1933இல் ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தின.ஜெர்மானிய ஆரிய இனமே உலகின் ஈடு இணையற்ற தலைமை இனம் என்கிற முழக்கத்தோடு இனச்சுத்திகரிப்புக் கொடும் செயல்களைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த ஹிட்லரின் கையில் கிடைத்த இந்த வாய்ப்பை அவன் தன் ஆரியக்கொள்கைகளை – ஆரிய ஜெர்மனியின் சிறப்பை- அதன் மீது உலகம் வைத்துவந்த விமர்சனங்களைப் புறந்தள்ளி -உலகுக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டான்.

அதற்கு முன்வரை ஜெர்மனியில் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களாக இருந்த பலர் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு தேசிய விளையாட்டு அமைப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்- அவர்கள் யூதர்கள் என்கிற காரணத்துக்காக.ஆரியர்களைத்தவிர வேறு யாராலும் விளையாட்டிலும் ஜெர்மானிய தேசியத்தின் பெருமையை உயர்த்திப்பிடித்திட முடியாது என்று வாதிடப்பட்டது.ஜெர்மானிய பாக்சிங் அசோசியேசன் அந்நாட்டின் மிகச்சிறந்த பாக்சிங் வீரரான எரிக் சீலிக்கை அவர் யூதர் என்பதற்காக வெளியேற்றியது.டேனியல் ப்ரென் என்கிற உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் ஜெர்மனியின் டேவிஸ் கோப்பை க்ளப்பிலிருந்து தூக்கி எறியப்பட்டார்-யூதர் என்பதற்காக.இப்படிப் பல அற்புதமான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் ஒன்றுகூடி யூத விளையாட்டு வீரர்களுக்கான அமைப்புகளைத் துவக்க முற்பட்டுக்கொண்டிருந்த வேளையில் 1936 ஒலிம்பிக் வந்து சேர்ந்தது.

ஆரம்பத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவதில் அவ்வளவு ஆர்வம் காட்டாதிருந்த ஹிட்லர் அதில் உள்ள விளம்பர அம்சத்தை அவருடைய கொள்கை பரப்பு அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ் (’ஒரு பொய்யை நூறு முறை திரும்பத் திரும்பச்சொன்னால் அது உண்மையாகிவிடும் ’ என்கிற தத்துவத்தை உலகுக்கு வழங்கியவர்) எடுத்துக்கூறியபின் பிரம்மாண்டமாக ஒலிம்பிக் நிகழ்வை நடத்தினான் ஹிட்லர்.உலகில் இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே பிரம்மாண்டமான நிகழ்வு 1936இல் ஹிட்லர் நடத்தியதுதான் என்று கூறப்படுகிறது.லட்சோபலட்சம் மக்கள் பேரணிகளாகவும் அலையலையான கூட்டங்களாகவும் அந்நிகழ்வில் ஆரிய முழக்கங்களோடு பங்கேற்றனர்.ஜெர்மானிய வீரர்கள் பதக்கம் பெற மேடையேறியபோதெல்லாம் லட்சோபலட்சம் மக்கள் எழுந்து நின்று ஹிட்லர் பாணியில் சல்யூட் அடித்து முழக்கமிட்டனர்.அன்று தொலைக்காட்சி வந்திருக்கவில்லை.வானொலி மட்டுமே இருந்தது.வானொலியை முழுமையாகக் கைக்கொண்டு ஜெர்மனியின் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் உள்ள மக்கள் வானொலி மூலம் ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் கேட்டு மேலும் தேசியப்பெருமிதமும் ஆரிய உணர்வும் கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.வெளி உலகுக்கு நாங்கள் ஒன்றும் இனவெறியர்கள் அல்ல என்று காட்டிக்கொள்ளவும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஹிட்லரின் ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் வலுவாக எழுந்தது.தலைமறைவு வாழ்க்கையில் இருந்த ஜெர்மானிய சோசலிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட்டுகளும் பெர்லின் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறு உலக மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.ஆனால் ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டில் அரசியலைப் புகுத்த அனுமதிக்க மாட்டோம்.ஹிட்லர் பாசிஸ்ட் என்றால் அது உங்கள் பிரச்னை.ஒலிம்பிக் கமிட்டி சொல்லும் தேவைகளை நிறைவேற்றிக்கொடுத்தால் போதும் பெர்லினில் நடத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று கமிட்டி கூறிவிட்டது.விளையாட்டின் அடிப்படை சமத்துவம்.நாஜிக்களின் அடிப்படை இனச்சார்பு.ஆகவே அடிப்படையிலேயே கோளாறு இருப்பதை கமிட்டி பார்க்கத் தவறிவிட்டது.

* * *

அரசியல் காரணங்களுக்காக விளையாட்டைப் பல நாடுகள்/வீரர்கள் புறக்கணித்த சம்பவங்கள் பல உண்டு.ஒலிம்பிக் மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளாகக் கருதப்படும் ஒலிம்பிக்,ஆசியன் கேம்ஸ்,காமன்வெல்த் போட்டிகள் இம்மூன்றுக்குமே இது நேர்ந்துள்ளது.

சமாதானம்,நல்லெண்ணம்,விளையாட்டின் மகத்துவம் இவற்றையே தன் லட்சியமாக ஒலிம்பிக் கொண்டிருந்தபோதும் நீண்ட காலம் சோவியத் யூனியனும்,மக்கள் சீனமும் அழைக்கப்படாமலிருந்தது அரசியல் காரணங்களுக்காகத்தான்.அரசியலுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு என்று திரும்பத்திரும்ப ஒலிம்பிக்,ஆசிய விளையாட்டு,காமன்வெல்த் போன்ற அமைப்பினர் சொல்லிக்கொண்டிருந்தாலும் இம்மூன்று மெகா விளையாட்டுக்களும் பிறந்த காலத்திலிருந்தே அரசியலோடுதான் நகர்ந்துகொண்டிருக்கின்றன.அரசியலுக்கு அப்பால் எதுவும் இல்லை.அரசியலற்றது என்று எதுவும் இருக்க முடியாது-விளையாட்டு உட்பட என்பதே நமது கருத்து.அது எந்த அரசியலாக இருக்க வேண்டும் என்பதே இக்களத்தில் நடக்கும் போராட்டம்.

விளையாட்டல்லாத கீழ்க்கண்ட விசயங்கள் விளையாட்டுக்குள் இருப்பதை நாம் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டியுள்ளது :-

1. இவ்விளையாட்டுக்கள் வெறும் விளையாட்டுக்களாகப் பார்க்கப்படுவதில்லை.ஒரு வீரர் வெற்றி பெற்றால் அது அந்த வீரரின் திறனாகப் பார்க்கப்படுவதில்லை.மாறாக அவரது நாடு வென்றதாகக் கருதப்படுகிறது.தேசியக்கொடிகள் ஆட்டப்படுகின்றன.அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஒரு போர் வெற்றி போல ஆக்கப்படுகிறது.தேசியப்பெருமிதம் ஊதி வளர்க்கப்பட( நன்றி-ஹிட்லர்) இவ்விளையாட்டுக்கள் பயன்படுகின்றன.இந்திய பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை இந்துத்வா சக்திகள் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துவது ஒரு உதாரணம்.

2. விளையாட்டுக்கள் பணமுதலைகளான கார்ப்பொரேட்டுகளின் ஆதிக்கத்துக்குள் வந்து விட்டன.விளையாட்டுக்களை வழங்குவது(ஸ்பான்சர்) ,வீரர்களை தத்தெடுத்து தங்கள் கம்பெனி தயாரிப்புக்களுக்கான விளம்பரங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்துவது ,ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தையே கம்பெனி விலம்பரத்துக்குப் பயன்படுத்துவது என்று தொடங்கி விளையாட்டின் ஒவ்வொரு அம்சமும் வியாபாரமாகிக் கிடக்கிறது. தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரமாகவும் பயன்படுகிறது.ஆசியன்,ஒலிம்பிக் மற்றும் பல கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நிறுவனங்கள் தாங்களே பெரும் பணம் படைத்த கார்ப்பொரேட்டுகளாகி அக்கமிட்டிகளுக்கான தேர்தல் போன்றவை பணமும் வன்முறையும் ஊடாடும் நிலை வந்துள்ளது. விளையாட்டு மொத்தத்தில் பணம் தொடர்பான ஒன்றாக ஆகிவிட்டது.

3. விளையாட்டென்பது எல்லோரும் பங்கேற்கும் நிகழ்வு என்பதற்காகவும் கூடி விளையாடும் சமூக அனுபவத்துக்காகவுமே நம் எல்லோராலும் காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது.ஆனால் அது இப்போது வெற்றி வெற்றி என்பதையே இலக்காகக் கொண்டதாக மாறிவிட்டது.அதிலும் தங்கப்பதக்கம் பெற்றவரே கொண்டாடப் படும்போது. மீடியாக்களில் கவனம் பெறும்போது தோற்ற வீரர்களின் உழைப்பும் ஈடுபாடும் மனநிலையும் கேலிக்குரியதாகிரது.பெருவாரியான வீரர்கள் தோற்பதற்காகவே இத்தனை காலம் உழைத்தது போல ஆகிவிடுகிறது.எப்படியாவது வெற்றி ஈட்ட வேண்டும் என்பதால் வீரர்கள் ஊக்க மருந்துகள் போதை வஸ்துக்களைப் பயன்படுத்துதல் போன்ற சிதைவுகளும் அரங்கேறுகின்றன.

4. விளையாட்டுக்களிலும் ஆணாதிக்கமே நிலவுவது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.பெண் வீரர்களுக்கு பயிற்சியாளர்களோ நிதி அளித்து உதவுபவர்களோ கிடைப்பதில்லை.நாடுகளும் பெண்களை அனுப்புவதில் பெரிய முயற்சிகள் செய்வதில்லை.பெண்கள் விளையாடும் விளையாட்டிலும் பாலியல் வக்கிரம் எங்கும் பரவிக்கிடக்கிரது.டென்னிஸ் வீராங்கனைகளின் உடை,நீச்சல் உடை போன்றவை விவாதத்துக்குள்ளாகின்றன.புதுக்கோட்டை சாந்திக்கு ஏற்பட்ட அவமானம் ஒரு ஆண் வீரருக்கு ஏற்பட்டதுண்டா?

5. எல்லா சர்வதேச விளையாட்டுக்களும் ஐரோப்பிய விளையாட்டுக்களாகவே உள்ளன.ஹாக்கி ஏதோ ஒரு ஓரத்தில் இடம் பிடித்துள்ளது.மேற்கத்திய நாடுகள் அல்லாத நிலப்பரப்புகளின் பல்லாயிரம் விளையாட்டுக்களுக்கு சர்வதேச விளையாட்டரங்குகளில் எந்த இடமும் இல்லை.

6. வன்முறைக்கு மரியாதை செய்யும் பாக்சிங்,மல்லுக்கட்டு போன்ற விளையாட்டுக்கள் மட்டுமின்றி ரசிகர்களை வெறி கொள்ள வைத்துத் தோற வீரர்களை மைதானத்துக்குள் புகுந்து அடிப்பது, வெற்றி தோல்வி சார்ந்து கலகம் மற்றும் ரகளையில் ஈடுபடுவது மற்றும் சில சந்தர்ப்பங்களில் நாடுகளுக்கிடையேயான போருக்குக்கூடக் காரணமாக அமையும் அளவுக்கு –விளயாட்டுகளில் இன்று வன்முறைக்கான வித்து புதைந்து கிடக்கிறது.சர்வதேச விளயாட்டுக்களின் கொள்கை முழக்கங்களுக்கு நேர் முரணானதல்லவா இது.

7. பெரும் கூட்டம் கூடுவதால் தீவிரவாதம் இவ்விளையாட்டுக்களை தம் நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.மூனிச் ஒலிம்பிக்கில் நடந்த படுகொலைகள் ஓர் உதாரணம்.ஆகவே அதைத்தடுக்க ராணுவம் போலீஸ் என்று குவித்து வைக்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.

8. ஒவ்வொரு ஒலிம்பிக்,ஆசியன் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடந்த நாடுகளிலும் அதற்கான இடம்,விளையாட்டுக் கிராமம் போன்றவற்றை உருவாக்கும்போது அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் துரத்தப்பட்ட –மாற்று வாழ்விடம் கொடுக்கப்படாத கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பல்லாயிரக்கணக்கான அல்ல பல லட்சம் மக்கள் இவ்விளையாட்டுக்களால் வீடிழந்து நிற்கிறார்கள்.வீடுகள் மட்டுமல்ல சாலையோர வியாபாரம் செய்து பிழைத்தவர்கள் போல பல தொழில்கள் அழிந்து வாழ்விழந்தவர் எண்ணிக்கையும் வளர்ந்து விரிகிறது.இவர்களின் கண்ணீரின் மீதுதான் தேசியப் பெருமிதம் வளர்க்கும் இவ்விளையாட்டுக்கள் எழும்பி நிற்கின்றன என்பது எவ்வளவு வேதனையான உண்மை.

9. விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள்,அமைப்புகளில் எந்த ஜனநாயகமும் இல்லை.

இவ்வாறான எதிர்மறை அம்சங்களாக நாம் பட்டியலிடுவது விளையாட்டுக்கள் கூடாது என்பதற்காக அல்ல விளையாட்டு கொடியவர்களின் கூடாரமாகவும் ஊழல் பெருச்சாளிகளின் கைப்பாவையாகவும் கார்ப்பொரேட்டுகளின் சொத்தாகவும் ஏழைகளுக்கும் உண்மையான விளையாட்டுத்திறன்களுக்கும் எட்டாக்கனியாகவும் மாறிவிடக்கூடாதே என்பதற்காகத்தான்.இன்னும் பேச நிறைய உண்டு.விளையாட்டை விளையாட்டாக நாம் எடுத்துக்கொண்டுவிட முடியாது என்பதை மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கலாம்.

பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : தமுஎகச கண்டனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பான எந்திரன் திரைப்படம் தயாரானது முதல் அக்கம்பெனியார் படத்துக்கான விளம்பரம் என்ற பெயரில் செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரையும் கவலை கொள்ளச்செய்வதாக உள்ளன. தங்கள் கையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதாலும் தாங்கள் போட்ட பணத்தைப்போல பல மடங்கு சம்பாதித்துவிட வேண்டும் என்கிற வியாபார வெறியுடனும் தமிழக இளைஞர்களைத் தவறான வழியில் திசைகாட்டும் வேலையை சன் குழுமம் செய்து வருகிறது.அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொட்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறது.தமிழகத்தின் பலமான ஒரு உழைப்புச் சக்தியை இவ்விதம் சிதைக்கும் பணியை சன் குழுமம் செய்கிறது.சன் குழுமம் செய்து வரும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு நடவடிக்கையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பும் மனச்சாட்சியும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதைக் கண்டனம் செய்ய வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.தாம் விரும்பும் திரைக்கலைஞரைக் கொண்டாடும் ரசிக மனநிலையை ஒரு பைத்திய மனநிலைக்கு வழிநடத்தி இட்டுச்செல்லும் சன் குழுமத்தின் வியாபார வலையில் விமர்சனமின்றி வீழ்ந்துவிட வேண்டாம் எனத் தமிழகத்து இளைஞர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

sa thamilselvan