திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Sunday, July 23, 2017

கடவுளை தொழுவதைவிட மற்றவர்களிடம் அன்பு காட்டுங்கள் புத்தக கண்காட்சியில் நடிகர் சிவக்குமார் பேச்சு



கோயம்புத்தூர், ஜூலை 21-கடவுள்களை தொழுகிற நேரத்தில் மற்றவர்களிடம்அன்பு காட்டினாலே போதுமானது என நடிகர் சிவக்குமார் வாசகர்கள் மத்தியில் உரையாற்றினார்.கோவையில் விஜயா பதிப்பகத்தின் வாசகர் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற எழுத்தாளர்கள் - வாசகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பங்கேற்று பேசியதாவது, ஒரு நடிகரான எனக்கு இலக்கியவாதி என்றதனித்த அடையாளம் எதுவும்இல்லை. இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று வருவதால் நூல் ஆர்வலர்கள்தான் அப்படிச் சொல்கின்றனர். எனது வாசிப்பு என்பது பெருங்கடலில் சிறு துளியைப் போன்றது. ஆனால்,நான் வாசித்ததை மற்றவர்களுக்குச் சொல்லி வருவதாலோ என்னவோ என்னை இலக்கியவாதி என்று அழைக்கின்றனர். பேராசிரியர் சாலமன் பாப்பையா கம்ப ராமாயணம் பற்றி பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், சில பாடல்களை மனப்பாடம் செய்து பேசினேன். பின்னர், ராமாயணம், மகாபாரதத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இருப்பினும் இந்த காப்பியங்களை புரிந்து கொள்வதற்கு அதிக காலம் பிடிக்கும். இந்த புராணக் கதைகள் ஒருகாலத்தில் மிகச் சிறிய கதைகளாக இருந்தன. அடுத்தடுத்து வந்த எழுத்தாளர்கள் இவற்றை பெரும் காப்பியங்களாக்கிவிட்டனர். இவற்றை நான் பேசி வருவதால் கடவுளைக் கும்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. கடவுளைத் தொழுவதற்கு ஒதுக்கும் நேரத்தில், அனைவரிடமும் அன்பு காட்டி, அனைவரையும் சமமாக மதித்து, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த காப்பியங்களில் இருந்து மக்களுக்குஎவையெல்லாம் தேவையோ அவற்றையே நான் பயன்படுத்துகின்றேன். மக்களும் தங்களது வாழ்க்கைக்கு எவை பயன்படுமோ அவற்றை மட்டுமே தேடிப்பிடித்து படிக்க வேண்டும்.பாரதியாரும் இந்த காப்பியங்களை நல்ல கதைகள் என்றும்ஆனால் அவை நமது வாழ்க்கைக்கு உதவக் கூடிய கதைகள்என்றும் கூறியிருக்கிறார்.வடநாட்டு, தென்னாட்டு நூல்களில் ஒழுக்க நெறிகள் குறித்துமுரண்பாடுகள் இருந்தாலும், நமக்குத் தேவையானவற்றை மட்டும் அவற்றில் இருந்து எடுத்துக் கொண்டால் பிரந்சனைகள் எதுவுமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Saturday, July 8, 2017

பாய்ச்சல் வேகத்தில் பாசிசம் – செங்கொடி பிடித்து களமிரங்குவோம் – ச.தமிழ்ச்செல்வன்

தீக்கதிர் செய்தி 

கோவை, ஜூலை. 7 –
பாய்ச்சல் வேகத்தில் பாசிசம் தெருமுனைக்கு வந்துவிட்ட நிலையில் அறிவின் அடிப்படையில் பெருவாரியான மக்களை திரட்டி பாசிச சக்திகளை விரட்டியடிக்க வேண்டிய வரலாற்று கடமை கம்யூனிஸ்டுகளின் முன்னால் இருக்கிறது என்று தியாகி முத்து நினைவுதின பொதுக்கூட்டத்தில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.
கோவையில் பஞ்சாலை தொழிலாளியாய் உரிமைக்கான போர்க்களத்தில் பஞ்சாலை முதலாளிகளின் குண்டர்களாள் படுகொலை செய்யப்பட்டார் தியாகி உப்பிலியபாளையம் முத்து. இவரது 64 ஆவது நினைவுதின பொதுக்கூட்டம் கோவை உப்பிலியபாளையம் பூங்கா திடலில் வெள்ளியன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இனைந்து நடத்திய கூட்டத்திற்கு எம்.தங்கவேல் தலைமை தாங்கினார். என்.வாசுதேவன் முன்னிலையில் ஆர்.பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக தமிழ்ச்செல்வன் பேசுகையில், தமிழக அரசு இடைவிடாது டாஸ்மாக் கடைகளை திறந்து கொண்டிருக்கிறது. குடிப்பது என்பது நாகரிகத்தின் அடையாளமாக மாற்றப்படுகிறது. எதிர்த்து குரல் கொடுப்பவர்களை அடக்குகிறது, ஒடுக்குகிறது, தாக்குதல் நடத்துகிறது, வழக்கு போட்டு அச்சுறுத்துகிறது. ஆனால் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என கம்யூனிஸ்டுகள் இடையிராது பாடுபடுகிறோம் தியாகம் செய்கிறோம். குடிகாரர்களை உருவாக்குகிறது ஒரு கட்சி, தியாகிகளை உருவாக்குகிறது இன்னொரு கட்சி. எங்கள் மேடைகளில் தியாகிகளை நாங்கள் போற்றுகிறோம். மறுபுறம் ஓபிஎஸ்,இபிஎஸ் என ஆளுக்கொரு நாடகம் நடத்தியும் தியாகத்தலைவி எப்படி மரணம் அடைந்தார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இயற்கையாக இறந்தாரா செயற்கையாக இறந்தார என்கிற விவாதம் இன்றுவரை நடந்து கொண்டே இருக்கிறது.   இதுதான் மற்ற கட்சிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் உள்ள அடையாளம்.
இந்தியா பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று நம்பி இந்திய மக்கள் தேசவிரோதிகளிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டார்கள். நாட்டின் அடிப்படை என்பது மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிச, குடியரசு என்கிற நான்கு வார்த்தைகளுக்குள் இந்தியா நிற்கிறது. இந்த நான்கு வார்த்தையும் அரசியல் சட்டத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும் என்கிற கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருப்பது மிக அபாகயரமானது. இந்த எச்சரிக்கையை இன்னும் மக்கள் உணரவில்லை. இந்த உணர்த்த வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக் உள்ளது. இன்று நிலவும் சுதந்திரம் நீடிக்குமா என தெரியவில்லை. இவர்கள் வைக்கிற ஒவ்வொரு தப்படியும்  திட்டமிடப்பட்டவை. பத்து அமைப்புகள் பத்துவிதமாக பேசுவார்கள் மக்களை குழப்புவார்கள். இது அனைத்தும் திட்டமிடப்பட்டவையே. இந்தியாவை இந்தியும், சமஸ்கிருதம் மட்டுமே ஆளவேண்டும் என நினைக்கிறார்கள்.
கும்பிட்டு பழகியவர்கள் அம்மா மரணத்திற்கு பிறகு யாரை கும்பிடுவது எனத்தெரியாமல் தற்போது மோடியை கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்களின் அடிப்படையான வாழ்வாதரப்பிரச்சனையில் இருந்து திசைதிருப்ப மாட்டிறைச்சி உண்ணக்கூடாது உள்ளிட்டு வாரம் ஒரு பிரச்சனையை தேசிய அளவில் கிளப்பி விடுகிறார்கள் பாஜகவினர். இவை அனைத்தும் பண்பாட்டுத்தளத்தின் மீதான தாக்குதல். இத்தகைய நிலையில் இருந்து நமது மொழியுரிமையை பண்பாட்டு உரிமையை பாசிச சக்திகளிடம் இருந்து பாதுகாக்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைவரும் ஒன்றினைந்து போராட்டக்களத்திற்கு வரவேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம். ஆர்எஸ்எஸின் வழிகாட்டுதலில் ஆட்சிசெய்யும் பாஜக தனது பாசிச கொள்கையை ஜானதிபதி தேர்தலுக்கு பிறகு முழுவீச்சில் அமலாக்குமா அல்லது அடுத்த ஐந்து வருடத்தில் அமலாக்க போகிறதா என்கிற அபாயம் தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் இருந்துதான் இந்த தேசத்தை பாதுகாக்க கம்யூனிஸ்டுகள் களம்காண்கிறோம். அறிவியலுக்கு விரோதமாக கருத்துக்களை பாஜக முன்வைக்கிறது, அறிவியல் பூர்வமான கருத்துக்களை நாம் முன்வைத்து அறிவார்ந்த மக்களை, கற்றரிந்த மக்களை திரட்டுகிற வரலாற்று கடமை நமக்கு இருக்கிறது. முன்னைக்காட்டிலும் முனைப்போடு செயல்பட வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. சாதி, சமயங்களற்ற சமூகமாக தமிழ்ச்சமுகம் இருந்தற்கான ஆய்வு கீழடியில் கிடைத்திருக்கிறது. இதுபோன்ற அறிவியல் பூர்வமான, வரலாற்று பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று கற்றரிந்த பெருவாரியான மக்களை திரட்டி தெருமுனைக்கு வந்துவிட்ட பாசிச சக்திகளை உயர்த்திப்பிடித்த செங்கொடியோடு முஷ்டியை உயர்த்தி முழக்கமிட்டு விரட்டியடிப்போம் என்று ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.

Friday, June 2, 2017

ஒற்றைக்கலாச்சார தாக்குதலை உறுதியுடன் எதிர்த்தவர் கவிக்கோ!

தமுஎகச மாநிலக்குழு இன் இடுகையை Sundara Kannan பகிர்ந்துள்ளார்.
தமுஎகச மாநிலக்குழு

ஒற்றைக்கலாச்சார தாக்குதலை
உறுதியுடன் எதிர்த்தவர் கவிக்கோ!
தமுஎகச புகழஞ்சலி
தமிழ்க் கவிதையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை நிறுவிக்கொண்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான், இலக்கியத்தோடு நின்றுவிடாமல், சமூக வெளியில் பன்முகப் பண்பாட்டுத் தளத்திற்கு எதிரான தாக்குதல்களை உறுதியாக எதிர்த்துப் போராடியவர்,” என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
கவிக்கோ என்று கவிதை அன்பர்களால் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அப்துல் ரகுமான் (70) வெள்ளியன்று (ஜூன் 2) காலை சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
‘வானம்பாடிகள்’ கவிதை இயக்கக் காலகட்டத்தில்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கினார். குறிப்பாகப் புதுக்கவிதை வடிவம், அதிலும் குறிப்பாகக் குறியீடுகள், உவமைகள், உருவகங்கள், படிமங்கள் வழியாகக் கவிதைக் கருத்துகளைக் கொண்டு சென்ற முன்னோடிகளில் ஒருவராகத் தடம் பதித்தார். இதில் அவரது முதல் புத்தகமான ‘பால்வீதி’ கவிதைத் தொகுதி ஒரு சோதனை ஆக்கமாக, கவி நேயர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கியது. அதே வேளையில், அவரது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது மரபுத் தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும்தான். இலக்கணக் கட்டுகளை மீறிய அவரது கவிதைப் படைப்புகளுக்கு இலக்கண அறிவே அடிப்படையாக அமைந்தது எனலாம்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற அவர், தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி கவி வடிவங்கள் வேர்கொண்டதிலும் ஒரு சிறப்பான பங்கு வகித்தார். சிலேடை வரிகளால் கவியரங்க மேடைகளுக்கு மக்களை ஈர்த்தார். இலக்கிய வடிவங்கள் மட்டுமல்லாமல், சமூக அக்கறை கொண்ட கருத்துகளையும் தம் படைப்புகளால் பரிமாரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேயர் விருப்பம், பித்தன், மின்மினிகளால் ஒரு கடிதம், பறவையின் பாதை உள்ளிட்ட கவிதை நூல்கள் அவரிடமிருந்து தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைத்தன. ‘ஆலாபனை’ என்ற கவிதை நூலுக்காக அவரை சாகித்ய் அகடமி விருது சென்றடைந்தது. தாகூரின் ‘சித்ரா’ கவிதை நூலைத் தமிழில் தந்தார். கவிதைகள் மட்டுமல்லாமல் எம்மொழி செம்மொழி, கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை, மரணம் முற்றுப்புள்ளி அல்ல என்பன உள்ளிட்ட பல கட்டுரை நூல்களும் அவரது கொடையாக உள்ளன.
மதுரையில் பிறந்து, படித்து வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து பேராசிரியராக வளர்ந்த அவர் பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறி தமது இலக்கியப் பணிகளை ஓய்வின்றித் தொடர்ந்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துடன் இணக்கமான உறவு கொண்டிருந்த கவிக்கோ, மதுரையில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்துடன் இணைந்து தமுஎகச நடத்திய 10 நாள் சங்க் இலக்கியப் பயிலரங்கில் ஒரு ஆசிரியராகப் பங்கேற்றார். இராக் நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த மனிதக்கொலைப் போரை எதிர்த்து சென்னையில் நடத்திய கவியரங்கில் கலந்துகொண்டு எழுச்சியூட்டும் கவிதையை அளித்தார்.
மதுரை நகரில் தமுஎகச 40ம் ஆண்டுவிழா சிறப்பு மாநாட்டில் பங்கேற்று, மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்று சிறப்புரையாற்றியது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பன்முகப் பண்பாட்டுத் தளத்தின் மீது தொடுக்கப்படும் வன்மம் மிக்க ஒற்றைக் கலாச்சாரத் தாக்குதலை உறுதியோடு எதிர்த்து நின்றார்.
இத்தகைய பணிகள் மிகவும் தேவைப்படுகிற இன்றைய சூழலில் அவரது மறைவு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாக வந்துள்ளது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவரது இலக்கிய அன்பர்களுக்கும் தமுஎகச சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.